ADMK: எடப்பாடி பழனிசாமிதான் எல்லாத்துக்கும் காரணம்.. எதுக்கு தெரியுமா? அதிமுக பரபரப்பு அறிக்கை
கடந்த சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்கு பிறகே நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக-வில் ஒவ்வொரு நாளும் பூதாகரமாக வெடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பினர் காய் நகர்த்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
இந்த சூழலில், அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தலைமை கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
அதிமுக அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமை கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் ஆலோசிக்கப்பட்டது.
இபிஎஸ்-தான் காரணம்:
சட்டமன்ற பொதுத் தேர்தலில், பொதுச்செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக 47 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும் என மொத்தம் 53 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறறனர்.
இதற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளர்களும், தலைமைக் கழக செயலாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளரகளும், தலைமைக் கழகச் செயலாளர்களும் தங்களது முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதிபட தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் வலுக்கும் மோதல்:
தேர்தல் முடிவுகள், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது என பல்வேறு விவகாரங்கள் காரணமாக எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்ட போக்கில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இருந்து வரும் சூழலில், அவர்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளார். ஆனால், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பினர் பொதுக்குழு-வை கூட்டி எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியை பறிப்பதற்கு வியூகம் வகுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி புதியதாக நியமித்த மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆதரவு தனக்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















