ADMK: பதவியை இழக்கிறாரா எடப்பாடி பழனிசாமி? புதிய தலைமையைத் தேடுகிறதா அதிமுக?
தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிமுக-வில் பலருக்கும் அதிருப்தி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கடந்த 4 நாட்களாக நடந்து வந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்துள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது.
தொடர் தோல்வியில் அதிமுக:
விஜய் தலைமையிலான தவெக ஆளுங்கட்சியாகவும், திமுக எதிர்க்கட்சியாகவும் பதவியேற்க உள்ள நிலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட் அதிமுக-வின் எதிர்காலம் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் மாபெரும் ஆளுமைகளின் கீழ் ஒற்றைத் தலைமையிலே இயங்கி வந்த அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தடுமாறத் தொடங்கியது.
பல்வேறு கட்ட போராட்டங்கள், மாற்றங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. ஆனால், அவரது தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தவெக-விற்கு சவால் அளித்து வந்த அதிமுக வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக இந்த தேர்தலில் 47 இடங்களிலே வெற்றி பெற்றுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக மூத்த நிர்வாகிகள்:
அதிமுக-விற்காக பரப்புரையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி தொடங்கினாலும் விஜய்யின் தவெக, திமுக-வை அவரால் வீழ்த்த முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை வலுவான தலைவராக அதிமுக-வில் நிலைநிறுத்த விரும்பினாலும் அவருக்கு தொடர்ந்து கட்சியில் சவால்கள் நீடித்தே வருகிறது.
தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏ-க்களில் சிலர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு உடன்படவில்லை. அவர்களில் சிலர் சிவி சண்முகம் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர். வட தமிழகத்தில் இருந்து இந்த முறை அதிமுக எம்எல்ஏ-க்கள் அதிகளவு தேர்வாகி இருப்பதால் சிவி சண்முகம் அதிகாரம் பெற்ற நபராக உருவெடுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
புதிய தலைமையா?
உள்ளாட்சித் தேர்தல், இரண்டு மக்களவைத் தேர்தல், இரண்டு சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை கண்டு வரும் சூழலில், அவரது தலைமைப் பதவி கேள்விக்குறியாகி வருகிறது. அவருக்கு நெருக்கடி அளித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் ஐக்கியமாகிய நிலையில், தினகரன் மற்றும் சசிகலா தனிக்கட்சி தொடங்கிய நிலையில் உட்கட்சியிலே அவரது தலைமை மீது விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு 72 வயதாகியுள்ள நிலையில், நீண்ட காலத்திற்கு அதிமுக-வை வழிநடத்தும் அளவிற்கு ஒரு வலுவான ஆற்றல் மிகுந்த தலைவர் அதிமுக-விற்கு வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்புகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா போல அதிமுக-வை நீண்ட காலத்திற்கு திடகாத்திரமாகவும், வலுவாகவும் வழிநடத்த இளம் தலைவர் தேவை என்றும் கருதப்படுகிறது.
அதிமுக-வின் எதிர்காலம் என்ன?
இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலே அதிமுக தொடர்ந்து பயணிக்குமா? அல்லது நீண்ட காலத்திற்கு வழிநடத்தும் வகையில் ஒரு புதிய ஆளுமையை அதிமுக தேர்வு செய்யுமா? என்ற பல்வேறு கேள்விகள் உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமை கேள்விக்குறியாகினால் அவரது பொதுச்செயலாளர் பதவி என்னவாகும்? என்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் தமிழ்நாட்டின் அரசியலில் மட்டுமின்றி திராவிட கட்சிகளின் உட்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ உள்ளது. குறிப்பாக, அதிமுக எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DMK: திமுக கூட்டணி தயவில் ஆட்சியமைக்கும் விஜய்! ஆளுங்கட்சியின் முதுகெலும்பான எதிர்க்கட்சி!
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















