கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.


சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்குள் ஆதரவு திரட்டுவது, நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எதிர்கொள்வது மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள், எடப்பாடி தரப்பால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என ஓ. பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். இவர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக வந்த நிலையில், இரு நீதிபதிகள் பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்தனர்.


 இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கு ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் கட்சிக்குள் தனது ஆதரவை திரட்டவும், தனது பலத்தை வலுப்படுத்தவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பாஜகவின் ஆலோசனையின் படி ஓ பன்னீர்செல்வம் தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானம், எடுக்கும் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்கு வாய்ப்பாகவே இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்கின்றனர்.


மற்றொரு புறம் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.