TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் பனையூர் தவெக அலுவலகத்தில் கதவைக்கூட திறக்காமல் வாசலிலே காத்திருக்க வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மிக கடுமையான சறுக்கலைச் சந்தித்து வரும் கட்சியாக அதிமுக மாறியுள்ளது. அந்த கட்சியில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான விவகாரத்தில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.
தவெக-வில் அதிமுக மாஜிக்கள்:
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலரும் தவெக-வில் இணைந்து வருகின்றனர். இன்று முன்னாள் அமைச்சர்களான எம்சி சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்களான பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி, சங்ககிரி கோவிந்தரராஜ், வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமுத்து, மதன்ராஜ், மான்ராஜ், பன்னீர்செல்வம், சிவகாசி ராஜவர்மன், ஆற்காடு விகேஆர் ஸ்ரீனிவாசன், எம்.முருகன் ஆகியோர் காலையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
கதவைத் திறக்காத தவெக:
ஆனால், கட்சி அலுவலகத்தின் வாசலிலே முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அதிமுக நிர்வாகிகள் பலரும் நீண்ட நேரமாக காத்திருந்தனர். தவெக அலுவலகத்தில் அவர்கள் வந்த தருணத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாததால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, சில அதிமுக நிர்வாகிகள் கதவைத் திறக்கவும் முயற்சித்துப் பார்த்தனர். பின்னர், தவெக-வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தவெக தலைமை அலுவலகத்தின் கதவை திறந்தனர். கதவைத் திறந்த பின்னர் அதிமுக-வினர் உள்ளே சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி வேதனை:
பின்னர், அவர்கள் அதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக-வில் முற்றிலும் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அனைவரும் தவெக-வில் ஐக்கியமாகியுள்ள நிலையில், இவர்களின் ஆதரவாளர்களும் தவெக-வில் இணைய உள்ளனர். அடுத்தடுத்து அதிமுக-வின் கீழ்மட்ட நிர்வாகிகள் தவெக-விற்கு தாவி வரும் சூழலில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகிறார்.
இதனால், கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அதிமுக-வை மீண்டும் கட்சியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தற்போது அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்தவர்கள் அனைவரும் அதிமுக-வின் முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்கள். ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அதிமுக-வை கீழ்மட்ட பகுதிகளில் உயிர்ப்புடன் வைத்திருக்க முக்கியமானவர்களாக எடப்பாடி பழனிசாமிக்கு பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.
ஆனால், இவர்கள் தங்களது அரசியல் எதிர்காலம் கருதியும், முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்து தற்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால் அவரைப் போல தாங்களும் எதிர்காலத்தில் கோலோச்சலாம் என்ற எண்ணத்திலும் தவெக-வில் இணைந்துள்ளனர்.
Before You Go
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
ட்ரெண்டிங் செய்திகள்






















