தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் என நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஜனவரி 27ம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது "சக்தி யாத்திரை" ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால்






எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு Z பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும், ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்.” என பதிவிட்டு இருந்தார். 


முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணைமலை தலைமையில் கடலூரில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய அண்ணாமலை, ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் தமிழ்நாடு முழுவதற்குமான தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். ராகுல் காந்தி நாடு முழுவதற்குமான ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்ணாமலை தமிழகம் முழுவதற்குமான தனது நடைபயணத்தை அறிவித்தார்.


9 தீர்மானங்கள் நிறைவேற்றம்:


இதனிடையே, பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதன்படி, முதலாவதாக ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்ற பாரத பிரதமருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக  அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்:


ராமர் பாலம் பாதிக்கப்படாமல்  சேது கால்வாய் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் எனவும்,  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசி தமிழ்சங்கம் தந்து தேசத்தை பாதுகாத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு எனவும்,  தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே  பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும்  திமுக தலைமையிலான அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழக அரசை கண்டித்து தீர்மானம்:


கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும்,  பூத் கமிட்டியை வலுப்படுத்தவும்,  தமிழக விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக கண்டித்தும், தமிழகம் தொழில் வளர்ச்சி 8ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக, பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட நட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்தநிலையில், அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன் என பகிரங்கமாக முன்னாள் பாஜக உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.