தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பனில் - 3 மிமீ, அதிராம்பட்டினத்தில் - 1 மீமி மழை பதிவாகியுள்ளது. 


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 7ஆம் தேதி வரை மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


04.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
05.04.2023 முதல் 07.04.2023 வரை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை   பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


அதிகபட்சமாக வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை PAP  (கோயம்புத்தூர்) தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தால் பூமியின் உஷ்ணம் சற்று குறைந்து இருந்தது. ஆனால் அதனையடுத்து தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளது. நேற்றய தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதாவது 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை மற்றும் வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அடுத்த மாதம் கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கத்திரி வெயில் இன்னும் தொடங்காத நிலையில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் நண்பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.