தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆந்திர  கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளையும் நாளை மறுநாளும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள்,  நீலகிரி,  தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிற்கு கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும். தற்போது வரை தென்மேற்கு பருவ மழை முடிவடையாத நிலையில் தெற்கு திசை காற்று வீசி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை காலை நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் இது தொடர்பாக பேசுகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் இயல்பான ஒன்று தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):


மாதவரம் 20, விரிஞ்சிபுறம் – வேலூர் 19, கட்டப்பாக்கம் 16, மேற்கு தாம்பரம் 14.5, திருவள்ளூர் 14, பல்லிக்கரணை 11.9, செம்பரம்பாக்கம் 10, கொடைக்கானல் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


வங்கக்கடல் பகுதிகள்:


27.09.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


28.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள்,  தெற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


29.09.2023 மற்றும் 30.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.