ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் ஆவின் பால் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பால் பல தரத்தில் வழங்கப்படுகிறது. கொழுப்புச் சத்து மற்றும் செறிவூட்டப்பட்ட பால் என பல நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் மட்டுமல்லாமல் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, இனிப்பு வகைகள் ஆகியவை மக்களுக்காக விற்பனை செய்யப்படுகிறது.


அவ்வப்போது பால் மற்றும் பிற பொருட்களின் விலையை உயர்த்துவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் இன்று ஆவின் நெய் விலை ரூ. 70 அதிகரித்து ஒரு லிட்டர் நெய் ரூ. 700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒராண்டில் 5வது முறையாக ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ள்து. ஆவின் நெய் மட்டுமல்லாமல் வெண்ணெயின்  விலையும் அதிகரித்துள்ளது. 100 கிராம் வெண்ணெய் ரூ. 5 அதிகரித்துள்ளது.


ஆவின் நெய் விலை பட்டியல்:


15 மில்லிலிட்டர் – ரூ.15


100 மில்லிலிட்டர் – ரூ.80


100 மில்லிலிட்டர் ஜார் – ரூ 85


200 மில்லிலிட்டர் ஜார் – ரூ. 160


500 மில்லிலிட்டர் ஜார் – ரூ. 365


ஒரு லிட்டர் ஜார் – ரூ.700


ஒரு லிட்டர் கார்டன் – ரூ.690


500 எம்.எல் கார்டன் – ரூ. 360


5 லிட்டர் ஜார் – ரூ.3600


15 கிலோ டின் – ரூ. 11,880


ப்ரீமியம் நெய் 500 மில்லி – ரூ. 410


ப்ரீமியம் நெய் ஒரு லிட்டர் – ரூ. 760


வெண்ணெய் விலை:


வெண்ணெய் 100 கிராம் – ரூ 60


500 கிராம் – ரூ. 275






இந்த விலை உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் தலையில் சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் விலையை, மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஆவின் நெய் விலை லிட்டருக்கு ₹70 முதல் ₹100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ₹30 முதல் ₹50 வரையிலும் உயர்த்தி, சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (14.09.2023) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆவின் பொருள்களின் இந்த விலையுயர்வு, தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, பால் கொள்முதல் விலையை ₹3 மட்டும் உயர்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பால் பொருள்கள் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனை விலையை மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க, ஆவின் நிறுவனத்தையே அழித்து விட வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது இன்னும் சில நாட்களில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள், வரவிருக்கின்றன. பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆவின் பால் பொருள்கள் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும். உடனடியாக, பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை, மக்கள் விரோத திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.