பால் தட்டுப்பாட்டை போக்க இன்று முதல் ( மார்ச் 1 ஆம் தேதி) Cow Milk என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.


கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துகுடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க ஆவின் தரப்பில் கவ் மில்க் என்ற புதிய பால் வகை இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. ஆவின் நிறுவனம் பச்சை பாக்கெட்டுகளின் பால் கொழுப்பு அளவை 3.5 சதவிகிதமாக குறைத்து உற்பத்தி செய்யவுள்ளது. ஒரு லிட்டர் பால் 22.50 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. பால் தட்டுப்பாடு காரணமாக பச்சை நிற பாக்கெட்டுகளில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கும் நிலையில் தட்டுப்பாடுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கொள்முதல் குறைவால் ஆவின் பால் தட்டுப்பாடு என தொடர் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு பால் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. தகவல் அறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பால் தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன? அதனை எவ்வாறு சரி செய்வது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது.


அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்,  "தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பால் வரவில்லை. அதையும் சரி செய்து விட்டோம். இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டத்தில் 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதனை சரி செய்து விடுவோம். கூடுதலாக பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் அளவு குறைவு என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகுதான் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தரக்கட்டுப்பாடு உணவு கட்டுப்பாடு மற்றும் ஆவின் என்ஜினீயர்கள் ஆய்வுக்குப் பிறகு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் எந்தவித காரணத்தை கொண்டும் அளவு குறைவு இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விவசாயிகளுக்கு சமீபத்தில் கொள்முதல் விலையும் ரூ.35 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் தனி பிராண்டாக உள்ளது. எந்தவித கலப்படமும் இல்லாமல் பால் வழங்கப்படுகிறது. ஆவின் வியாபார நோக்கத்தோடு செயல்படும் நிறுவனம் அல்ல. பொதுமக்கள் சேவைக்காக இயங்கி வருகிறது” என தெரிவித்தார்.


நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் தேவைப்படுகிறது. இந்த குறைபாடிற்கு காரணம் தனியார் நிறிவனம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வது தான் என ஆவின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை நிற ஆவின் பாக்கெட்டுகளால் நஷ்டம் ஏற்படுவதாகவும், இவற்றை சரி செய்ய ஆவின் தரப்பில் இன்று முதல் கவ் மில்க் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.