ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல்படும் நிறுவனமான ஆவின் (AAVIN) பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு வண்ணங்களில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. Standardised Milk நீல நிற பாக்கெட்டாகவும், Toned Milk பச்சை நிற பாக்கெட்டாகவும், கொழுப்புச்சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், டிலைட் ஊதா நிற பாக்கெட் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனோடு சேர்த்து பால் சார்ந்த பொருட்களும் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது. 

இப்படியான நிலையில் பச்சை நிற பால்  பாக்கெட்டான ஆவின் க்ரீன் மேஜிக் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாடு எழுந்து வருகிறது. விற்பனையாளர்களிடம் கேட்டால் வரத்து குறைவாக இருப்பதாக காரணம் தெரிவிக்கிறார்கள் என சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பிற நிறங்களில் வரும் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸூம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

Continues below advertisement

அன்புமணி கடும் கண்டனம்

அவர் வெளியிட்ட பதிவில், “ தமிழ்நாடு முழுவதும் ஆவின் பச்சை பால் விற்பனை பெருமளவில்  குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பாலை ரூ.24 வரை கூடுதல் விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பச்சை நிற பாக்கெட் பாலை ஆவின் குறைத்தது நியாயமற்ற செயலாகும். சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் 14 லட்சம் லிட்டர் பாலில் அதிகப்பட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சை நிற பாக்கெட் பாலாகும். தற்போது அதன் உற்பத்தி 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் முற்றிலும் நிறுத்தப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும்” எனவும் அன்புமணி கூறியிருந்தார். 

ஆவின் கொடுத்த விளக்கம்

இந்நிலையில் ஆவின் நிறுவனம் அளித்த விளக்கத்தில், “ஆவினின் பச்சை நிற பால் வகையான க்ரீன் மேஜிக் பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் க்ரீன் மேஜிக் பாலும் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Also Read: MLA Pallavi: இணையத்தில் மோசமாக சித்தரிக்கப்படும் MLA பல்லவி.. குவியும் கண்டனம்.. மனசாட்சியே இல்லையா?

பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான  செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் க்ரீன் மேஜிக் பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.