சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் நிர்வாணமாக ஓடியதால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவரின் பயணத்தை ரத்து செய்தனர். 


சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாட்டில் இருந்து வருகை தருவதும், இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்ல வருவது வழக்கம். பயணிகளை வழியனுப்ப குடும்பத்தினரும் வருகை தருவதால் எப்போதும் விமான நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.


இப்படியான நிலையில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது. இதில் பயணிக்க வந்த பயணிகள் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் குடியுரிமை சோதனைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற பயணியான பெத்தனன் இளங்கோ என்பவர் தனது தந்தையுடன் அங்கிருந்தார். 


47 வயதான அவரும், அவர் தந்தையும் அபுதாபி வழியாக அமெரிக்கா செல்லவிருந்தனர். அப்போது திடீரென பெத்தனன் இளங்கோ விமான நிலைய வளாகத்தில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓடினார். இதனைக் கண்டு அங்கிருந்த பயணிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சற்று நேரம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய உயரதிகாரிகள் பெத்தனன் இளங்கோவை சூழ்ந்துகொண்டு ஆடையை அணிய சொல்லி கட்டாயப்படுத்தி போட வைத்தனர். உடனடியாக அவரையும், தந்தையையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தனது மகன் பெத்தனன் இளங்கோ மன அழுத்தத்தால் அப்படி நடந்து கொண்டதாக தந்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பயணியை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறிய அதிகாரிகள் அவர்களின் விமான பயணத்தை ரத்து செய்தனர். பெத்தனன் இளங்கோவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உடல்நலம் சரியான பிறகு பயணிக்கும்படி அறிவுறுத்தினர். மதுரையில் இருந்து அமெரிக்கா செல்ல சென்னை வந்த இருவரையும் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைத்தனர்.