கரூர் அருகே 50 வருட பழமையான வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70). வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு, பெற்றோர் தனியாக வசித்து வருகின்றனர். 

 

இன்று காலை வழக்கம்போல் தூங்கி எழுந்ததும் கந்தசாமி வெளியே சென்று விட்டார். அப்போது சுமார் 6:30 மணி அளவில் மூதாட்டி லட்சுமி வீட்டிற்குள் காப்பி போட சென்றுள்ளார். சுமார் 50 வருட பழமையான வீடு என்பதால், திடீரென்று வீட்டின் மேல் கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய லட்சுமி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இறந்துள்ளார். வீடு இடிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வாங்கல் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 

 

தொடர்ந்து மூதாட்டி உடல் இடுபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

18 வயதுக்குட் பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர்  எச்சரித்துள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறையின் சார்பில் புகையிலை உபயோக தடுப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், தேசிய புகையிலை தடை சட்டம் 2003- ன் படி, மருத்துவ நிலையங்கள், உணவு விடுதிகள், கல்வி நிறுவனங்கள்,பொது நூலகங்கள்,பஸ் நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், புகைவண்டி நிலையம், திரையரங்குகள்,பணிபுரியும் இடங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலக பொது இடங்களில் யாரும் புகை பிடிக்கக் கூடாது.

18 வயதுக்குட்பட்ட நபர்களிடம் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. தேநீர் கடைகளில் புகையிலைப் பொருட்களை காட்சிப்படுத்துதல் கூடாது. புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி, 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இல்லை ஆகிய பதாகைகளை சுகாதாரத்துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி காட்சிப்படுத்துதல் வேண்டும்.

புகையிலைப் பொருட்கள் குறித்து விளம்பர பலகை வைக்கக்கூடாது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.கல்வி நிலையங்களை சுற்றி 300 அடி தொலைவில் உள்ள கடைகளில் யாரும் புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

புகையிலை தடை சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட மாவட்ட அளவில், வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 கல்வி நிறுவனங்கள் 15.6.2023-க்குள் புகையிலை தடை சட்டவிதிகளை அமல்படுத்தி புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்கிற சான்றிதழ் பெற பொது சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு விண்ணப்பித்து ,சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்துசான்று பெறாத அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டியல் கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.