ஜெர்மனி பிராங்க்பர்ட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சியில் கரூரிலிருந்து 60 நிறுவனங்கள் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் 30 சதவீத மானியத்துடன் பங்கு பெற இருப்பதாக கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.




ஜெர்மனி பிராங்க்பர்ட்டில் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




அப்போது செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், ஜவுளி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவர்களுடைய பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலக அளவில் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்த ஜவுளி கண்காட்சியில் உலகளவில் இருக்கக்கூடிய பல ஜவுளி நிறுவனங்கள் அவர்களுடைய பொருட்களை காட்சிப்படுத்தி, புதிய வாடிக்கையாளர்களை பெறுவதும், புதிய ஆர்டர்களை பெற்றும் வருகின்றனர். 




கரூர் மாநகரிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 நிறுவனங்கள் அவர்களது பொருட்களை காட்சிப்படுத்தி வருகிறார்கள். இந்த கண்காட்சியில் பங்கேற்கும் ஜவுளி நிறுவனங்கள் அவர்களது ஜவுளி பொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம்? அடுத்த ஆண்டு இருக்கக்கூடிய வண்ணம், டிசைன், டிரெண்ட்ஸ் எப்படி இருக்கிறது? ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்ளும் போது அவர்களுடைய பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஜவுளி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 




இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், அவர்களின் மொத்த ஆர்டரில் 30 சதவீத ஆர்டர்களை கண்காட்சியில் இருந்து பெறுவார்கள். இக்கண்காட்சியில் இந்தியாவில் இருந்து 300 நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள், மேலும் கண்காட்சியில் பங்கு பெறுவதற்காக மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் 30% மானியம் வழங்கப்படுகிறது என்றார்.