தமிழகத்தில் முதியோர்கள் , மாற்றுத்திறனாளிகள், நோயால் பாதிக்கபட்டவர்கள் என பலர் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை முழுமையாக கிடைக்கவேண்டும் என  மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக  முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி கடந்த 5-ஆம் தேதி பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் இத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக மக்களை தேடி  மருத்துவம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதற்கிடையில் இத்திட்டம் தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் இது சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள், உள்ளிட்டவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனைகள் உள்ளிட்ட உடல் நல பிரச்னையுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், படிப்படியாக 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 257 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒரு வார காலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில்  கடந்த 5 ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 59,763 பேர் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இதுவரை உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கபட்டு  சிகிச்சை பெற்றவர்கள், 26,858 பேர்களும், நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு  சிகிச்சை பெற்றவர்கள், 17,143 பேர்களும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்யால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றவர்கள், 12,130 பேர்களும், நோய் தடுப்பு சிகிச்சை பெற்றவர்கள், 1,804 பேர்களும், உடற்பயிற்சி சிகிச்சை பெற்றவர்கள், 1,811 பேர்களும் ,மற்றும் இதர நோய்கள் பாதிக்கபட்டவர்கள், 17 பேர்களுக்கும் என மொத்தம் 59,763 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டுள்ளது என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்டா மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, 2,230 பேர்களும், பெரம்பலூர் 1,627 பேர்களும், திருச்சி 1,365 பேர்களும், தஞ்சாவூர் 1,298 பேர்களும், அரியலூர் 1,135 பேர்களும், கரூர் 938 பேர்களும், திருவாரூர் 620 பேர்களும், மயிலாடுதுறை 351 பேர்களும் என மொத்தம் 9,564 பேர்கள் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.