திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 130 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் அதிக அளவில் வெளியில் வராத காரணத்தினாலும் அரசின் முழு ஊரடங்கு காரணத்தினாலும் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தொற்று குறைய தொடங்கியுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் ஒத்துழைத்தால் மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இன்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் 395 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, நன்னிலம்,  குடவாசல், மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று வரை 4770 நபர்கள் தற்போது வரை சிகிச்சையில் உள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 877 நபர்கள் பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.



அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 11 நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 241 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 1055 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 727 படுக்கைகளில் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனையில் உள்ள 271 படுக்கைகளில் 173 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதேபோன்று கோவிட் கேர் மையத்தில் ஒட்டுமொத்தமாக உள்ள 1105  படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 592 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 470 ஆக்சிஜன் படுக்கைகளில் 455 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் படுக்கை பிரிவில் 119 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தனியார் மருத்துவமனைகளில் 80 நபர்கள் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் 35 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.