சென்னையில் உள்ள டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்ட விழா நேற்று (அக்.18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது, சர்ச்சையைக் கிளப்பும் விதமாக இருந்தது. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.


மேலும் இந்தியாவில் 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் அமலில் இருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் இந்தி உட்பட மூன்றாவதாக எந்த மொழியும் கற்பிக்கப்படுவதில்லை எனவும் ஆளுநர் கூறி இருந்தார். 


இதை அடுத்து, ஆளுநர் கற்பனை உலகத்தில் இருப்பதாகவும் அவர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’இந்தியாவின் 28 மாநிலங்களில்  27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப் படுவதாக மாண்புமிகு ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்


பல இந்தி பேசும் மாநிலங்களில், குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்டில் செயல்படும் பல அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை. ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.


மும்மொழி அல்ல ஒரு மொழித் திட்டம்


பல்லாயிரம் 'ஆங்கிலம் கற்ற' மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன். அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை. ஆழமாகப் பார்த்தால், அங்கு 'ஒரு மொழித் திட்டம்' தான் செயல் படுத்தப்படுகிறது


இரண்டாவது மொழி என்ற பெயரில் இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிருதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காக 'கற்பிக்கப்படுகின்றன'. தென் மாநில மொழிகள் - தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை.


இந்தி கற்க எந்தத் தடையும் இல்லை


தமிழ் நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், CBSE, ICSE பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் KV பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி . தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.


ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்’’.


இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.