திருவண்ணாமலை  மாவட்டம் அடுத்த ஒரு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் திருமலை கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் மணிகண்டனுக்கும் (32) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். பெற்றோர்களின் இந்த முடிவுக்கு 10ஆம் வகுப்பு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 3 மாதங்களுக்கு முன் வலுக்கட்டாயமாக ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் சிறுமிக்கும், மணிகண்டனுக்கும் திருமணம் செய்துள்ளனர். 




இந்த நிலையில் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் நடந்ததாக சமூகநலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சமூகநலத்துறை அதிகாரிகள் திருமலை கிராமத்திற்கு சென்ற நிலையில் இது குறித்து தகவலறிந்த மணிகண்டன் குடும்பத்தினர். சிறுமியை திருவண்ணாமலையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று ரகசியமாக வைத்துள்ளனர். இதையடுத்து சமூக நலத்துறையினர் மணிகண்டன் வீட்டில் உள்ளவர்களிடம் நடத்திய  விசாரணையில், சிறுமியை திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்கு அழைத்து சென்றது அவர்களுக்கு தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் திருவண்ணாமலைக்கு சென்று சிறுமியை மீட்டு  குழந்தைகள் நல காப்பத்தில் ஒப்படைத்தனர்.



இதைத்தொடர்ந்து அதிகாரி எலிசபெத்ராணி இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சிறுமியை திருமணம் செய்த மணிகண்டன், திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை சேகர் (45). தாய் சுந்தரி (40) ஆகிய 3 நபர்கள் மீதும் ஆய்வாளர் அல்லிராணி போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதன் பிறகு சமூக நலத்துறை அதிகாரி எலிசபெத்ராணி சிறுமியின் பெற்றோர் மற்றும் மணிகண்டனிடம் காவல்நிலையத்தில்  வைத்து குழந்தை திருமணம் பற்றியும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கி உறைத்தார். அதன் பின்னர் இவர்களை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006


18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள். 


குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண் – 1098