கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் மாது (29). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜக்கடை பகுதியை சேர்ந்த தீபா (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு யோகஸ்ரீமதி என்ற 7 வயது மகள் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். டிரைவரான மாதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மாது வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் வரும் வருமானத்தை மதுகுடித்து செலவு செய்து வந்துள்ளார். இதனால் வீட்டு செலவை சமாளிக்க தீபா போச்சம்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 




இந்தநிலையில் மாது தனது மனைவியின் ஸ்கூட்டரை மது குடிப்பதற்காக அடமானம் வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் தனது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மாலையில் தீபா தனது மகள் யோகஸ்ரீமதியை அழைத்து கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த தீபா தனது மகளை கிணற்றில் தூக்கி போட்டு விட்டு, தானும் குதித்தார். இதில் 2 நபர்களும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த நிலையில் தீபாவும், யோகஸ்ரீமதியும் கிணற்றில் பிணமாக மிதப்பதை காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் மத்தூர் காவல்நிலையத்திலும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தீபா மற்றும் சிறுமி யோகஸ்ரீமதி ஆகிய 2 நபர்களின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.



அப்போது அங்கு திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து 2 நபர்களின் உடல்களையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணவர் மாது, இவருடைய தாயார் செல்வி, மாதுவின் தம்பி சதீஸ் ஆகிய 3 நபர்களையும் கைது செய்தனர். மத்தூர் அருகே மது குடிக்க ஸ்கூட்டரை கணவர் அடமானம் வைத்ததால் மனவேதனையில் குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். 


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)