ஒரே நாளில் 76.9 மி.மீ. மழை பதிவு


தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்கு ரோடு, ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், கடைவீதி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 10 மணிக்கும் மேலாக கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சேலம் புதிய பேருந்து நிலையம், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சேலம் மாநகர பகுதியில் நேற்று ஒரே நாளில் 76.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 



 


சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக ஏற்காட்டில் 88.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், சங்ககிரியில் 79.2 மி.மீ, டேனிஸ்பேட்டையில் 75 மி.மீ, ஏத்தாப்பூர் 62 மி.மீ, ஆணைவாரி 57 மி.மீ, ஓமலூர் 55.3 மி.மீ, வாழப்பாடியில் 50 மி.மீ, மேட்டூரில் 46.6 மி.மீ, எடப்பாடியில் 23 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் 790 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த பருவ மழையில் 24 மணி நேரத்தில் பெய்த மழையை காட்டிலும் அதிகமாகும்.


மழையால் மக்கள் மகிழ்ச்சி


கோடை வெயிலில் தாக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பொழிந்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் சிறுவர்கள் சாலையிலும், வீட்டின் மேல் தளத்திலும் மழையில் விளையாடி வருகின்றனர். தொடர் மழை காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் வாட்டி வதைக்கும் என்று மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் விளைவு வருகிறது. 



 


ஏற்காட்டில் மழை


இதேபோல், ஏற்காட்டில் கடந்த ஐந்து நாட்களாக கடும் பணி நிலவி வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஏற்காட்டில் காட்டும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஏற்காடு பேருந்து நிலையம் படகு இல்லம், அண்ணா பூங்கா, சேர்வுராயன் மலை, லேடிஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் திடீர் மழையால் ஏற்காட்டில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இந்த திடீர் நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.