தருமபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கீரைபட்டி, ஈட்டியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் பப்பாளிப் பழங்கள் தமிழகம் மட்டுமில்லாது வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம்

 

வைட்டமின் ஏ, பீட்டா புரோட்டின் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து ஆகிய சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை திறன் அதிகரிப்பு, இருதய நோய்களைத் தடுக்கும் தன்மை பப்பாளிக்கு இருப்பதால் மக்களும் விரும்பி வாங்கும் பழமாக பப்பாளி இருந்து வருகிறது. பப்பாளி பயிர் சாகுபடி செய்வதற்கு கால நிர்ணயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயிர் செய்யலாம் என்பதால் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் செடிகளை நடவு செய்யப்பட்டு 8 மாதங்களில் பப்பாளி பழங்கள் அறுவடைக்கு தயாராகின்றன. 

 

ஒரு ஏக்கரில் பப்பாளி சாகுபடியில் செய்தால் வாரம் ஒருமுறை ஒரு டன் வரை பப்பாளிப்பழம் பறிக்கலாம். கடந்த ஆண்டு ஒரு டன்  பப்பாளி பழமானது சந்தையில் 7 ஆயிரம் வரை  விற்பனையானது. கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தற்பொழுது பப்பாளி  ஒரு டன்னுக்கு 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

பப்பாளி சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி பகுதி விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். நல்ல விளைச்சல் அடைந்த பப்பாளி பழத்தில் திடீரென வெள்ளை பூஞ்சை தாக்குதல் அதிகரித்துள்ளதால் அறுவடைக்கு தயாராக இருந்த பப்பாளி பழங்கள் கருகியும் அழுகியும் வீணாகி வருகின்றன.  இதனை தடுக்க மருந்து தொளித்தாலும் வெள்ளை பூச்சி தாக்குதல் தொடர்வதால் பப்பாளி வாங்க வரும் வியாபாரிகள் பழங்களை வாங்காமல் திரும்பி  செல்வதாக விவசாயிகள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

 

பப்பாளியை அறுவடை செய்து விற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். பப்பாளியை சாகுபடி மற்றும் பராமரிப்பு செய்ததற்கான பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள பப்பாளி பயிர்களை முறையாக கணக்கெடுத்து, வேளாண்மை துறை சார்பில் உரிய வழிகாட்டுதலும் வெள்ளை பூச்சி தாக்குதலால் ஏற்பட்டுள்ள பப்பாளி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பி சாகுபடி செய்த பப்பாளிக்கும் நல்ல விலை சந்தையில் கிடைத்துவரும் நிலையிலும் வெள்ளை பூஞ்சை நோய் தாக்குதலால் சாகுபடி பாதிப்படைந்துள்ளது அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது.