சேலம் மாவட்டத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 37 ஒன்றியங்கள் மற்றும் 33 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளுக்காக ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டறிய வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அவர் மீதே அவதூறு பரப்புகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதன்மை மாநிலம் என்று சொன்னார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக அரசை எதிர்த்து பாஜக மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுகவில் 25 மாவட்டங்களுக்கான அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. உட்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு நானும் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் போராட்டம் அறிவிப்போம் என்றார். சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா என கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அனைத்து மாவட்டங்களும், தலைமைக் கழகமும் இணைந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும் ஓபிஎஸ் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது என்றார்.
சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,அரசியல் வேறு. தனிப்பட்ட முறையில் பிரச்சனை கிடையாது. அதனடிப்படையில் ஓபிஎஸ் பேசியுள்ளார். இப்போது ஸ்டாலினுடன் எங்களுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்சனை உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் விசாரணை நடைபெறும்போது, கருத்து சொல்வது குந்தகம் விளைவிக்கும்.
மூச்சுக்கு 300 தடவை ஜனநாயகத்தை பேசும் திமுக, தற்போது இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு, இப்போது போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு திட்டத்தை அறிவித்தால் அதற்கான காலம் தேவைப்படுகிறது. கொரோனா காலத்தில் 10 மாத காலம் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 97 சதவீதம் பணிகள் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒத்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான். எட்டு வழிச்சாலையை எக்ஸ்பிரஸ் வே என பெயர் மாற்றி கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது. அத்திட்டம் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது.
காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகா நடந்து கொள்ள வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி நதியை நம்பியே தமிழ்நாட்டு மக்களும் விவசாயிகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மேகதாது அணை பிரச்சினையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் திமுக அரசின் சாதனை என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.