வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை பயணத்தை குறிக்கும் 'தமிழர் தலைவரின் வாழ்வும் பணியும்' என்ற நூலினை வெளியிட்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் என்னைப் போன்ற அமைச்சர்களுக்கு வேலையே இருந்திருக்காது. மேலும், வீரமணி உடனான சில சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் திராவிட கட்சியின் துணைத் தலைவர் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு வரும் 11 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கடந்த மாதம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 46 ஆயிரம் மனுக்களில் 26 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டால் அந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மேற்கு மாவட்ட பொறூப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.