சேலத்தில் பெரியார் சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி. வாழ்க்கை ஒப்பந்தத்திற்கான உறுதி மொழியை பெரியார் சிலை முன்பாக ஏற்றுக்கொண்டனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்த் குமார் (23) மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் தேனி போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா (20) என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 



இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கௌசல்யா வீட்டில் இருந்து வெளியேறி வசந்த் குமார் உடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து வெளியேறி கௌசல்யா நேற்று சேலம் வருகை தந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடி இருவரும் ஒருவருக்கொருவர் பூ மாலை மாற்றிக்கொண்டு வாழ்க்கை ஒப்பந்தத்திற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். 



பின்னர் பெண்ணின் பெற்றோரினால் காதல் ஜோடிக்கு உயிருக்கு ஆபத்திருப்பதால், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த காதல் ஜோடி இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை முன்பு திடீரென காதல் ஜோடிகள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.