சேலம் மாநகர காவல்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சேலம் மாநகர காவல் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களின் முதலாளிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கான இலவச உதவி தொலைபேசி எண் வெளியிடப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரம் தொடர்பு கொள்ளும் வகையில் உதவி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா, வட மாநில தொழிலாளர்களை நம்பிக்கை அளிக்கும் வகையில் ஹிந்தியில் பேசி காவல்துறையினரின் ஆதரவை தெரிவித்தார்.



கூட்டத்தில் பேசிய சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, "சேலம் மாநகரப் பகுதியில் பணிபுரியும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது எங்களது கடமை. உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் 24 மணி நேரமும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். வட மாநில தொழிலாளர்கள் எந்தவித பயமும் இன்றி தங்களது வேலையை செய்யலாம். நீங்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளதை உங்களது உறவினர்களிடம் தெரியப்படுத்துங்கள். உங்களை யாரும் இங்கு தொந்தரவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது பொது இடத்தில் உங்களுக்கு யாராவது தொந்தரவு செய்தால் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுக்கவும். உங்களுக்காக தமிழக அரசு, டிஜிபி போன்ற உயர் அதிகாரிகள் தலைமையில் உங்கள் பாதுகாப்பிற்காக எங்களால் முடிந்த வரை முயற்சி எடுத்து வருகிறோம். உங்களிடம் இருந்தும் எங்களுக்கு சில உதவிகள் வேண்டும். அதாவது நீங்கள் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.  உங்களுக்குள் வரும் சண்டைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு” என்று பேசினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர்,  “சேலத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து வருகிறோம். இன்று அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அவர்களே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ போலி என தெரிவித்து, தங்களுக்கு பாதுகாப்பு உள்ளது எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என தெரிவித்தனர். ஆனாலும் அவர்களுடைய குறைகள் மற்றும் பிரச்சனைகளை அறிய இந்தி பேசும் தொடர்பு அதிகாரி நியமித்து உள்ளோம். பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தொடர்பு எண்ணையும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


Salem City IS office
94981 00945
0427 222 0200


Control Room
0427 221 0002
9498181218


Social media
9087200100