சேலம் மாநகர் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதியர். இவர்களது மகள் பானுப்பிரியா. இவரது 3வது கணவர் செங்கோடன். சற்றுமனநலம் பாதிக்கப்பட்ட பானுப்பிரியா, கணவரை பிரிந்து, நிறைமாத கர்ப்பிணியாக பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த 6 ஆம் தேதி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பானுப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், 20 ஆம் தேதி குழந்தையை ரூபாய் 3.20 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள், சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் குழந்தை விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து, அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல்துறை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கணவருடன் வாழாமல் வீட்டிற்கு வந்த பானுப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டது. அப்படியானால் குழந்தையை யார் கவனிப்பது என்று தெரியாமல் பெற்றோர் திணறி வந்தனர்.
இந்த நிலையில் பானுப்பிரியாவின் தம்பி ரமேஷ், குழந்தையை தெரிந்தவர்களுக்கு கொடுத்துவிடலாம் என கூறியுள்ளார். அதன்படி ரமேஷ், லீ பஜாரில் மளிகை கடை நடத்தி வரும் ராஜா என்பவரிடம் ரூபாய். 3.20 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அந்த பணத்தில் அவர் இருசக்கர வாகனம் வாங்கியதும் தெரியவந்தது. ரூபாய் 1.20 லட்சத்தை மட்டும் அவரது தாய் மற்றும் அக்கா பானுப்பிரியாவிடம் கொடுத்தது தெரியவந்தது. அப்படியானால் குழந்தை எங்கே என ராஜாவிடம் விசாரணைக்கு சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்றி இரவு 7.30 மணியவில் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக குழந்தையை அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீசார் சமூகநலத்துறை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர். குழந்தையை விற்பனை செய்த ரமேஷ், அவரது மனைவி, பானுப்பிரியாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை வாங்கிய ராஜாவையும், அவர் யாருக்கு குழந்தையை கொடுத்தார் என்பது குறித்தும் அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.