சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (03.08.2022) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை ஈடாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 03.09.2022 பணி நாளாக உத்தரவிட்டுள்ளார். நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றல் புனித நீராட தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



அதில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1 இலட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 75 ஆயிரம் கன அடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சுமார் 1 இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால், அணைக்கு வரும் நீரானது முழுமையாக உபரி நீராக வெளியேற்றப்படும். 


மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்படும் என வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நாளை 03.08.2022 (ஆடி 18) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொது மக்கள் புனித நீராட வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 



எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை எடுக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண