'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தன்னைப் பேசவிடவில்லை என்று கூறி தவெக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பணிகள் மேற்கொள்ளவில்லை, வரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால், திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தன்னைப் பேசவிடவில்லை என்று கூறி தவெக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கூட்டம் துவங்கியதுமே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சியில் குடிநீரை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் குடிநீர் தனியார் மயமாக்கும் கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மேயர் இருக்கை முன்பாக அமர்ந்து கூட்டம் முடியும் வரை தர்ணாவில் அமர்ந்திருந்தார்.

இதனிடையே சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், பணிகளை செய்யுமாறு அரசு அதிகாரிகளை நிர்பந்திப்பதும், ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதை, தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். அப்போது தவெக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் மாமன்ற உறுப்பினர்கள் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை; வார்டுகளுக்கு செல்வதில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன் வைப்பதாக தெரிவித்தார். குறிப்பாக 33வது வார்டு பணிகள் நடைபெறவில்லை என்று மக்கள் நேரடியாகவே குற்றச்சாட்டை வைத்ததாகவும் கூறினார்.

அப்போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரிடம் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தன்னை பேசவிடவில்லை என்று கூறி, மாமன்ற கூட்டத்திலிருந்து சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் வெளியேறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















