தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஏராளமான விவசாயிகள் விளைவித்த பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனால் பூக்கள் விலை உயர்ந்தது. இன்றைய சந்தையில் மல்லிப்பூ விலை கிலோ 1800 ரூபாய்க்கும், காக்கடா, சன்ன மல்லி, கனகாம்பரம் கிலோ 1200 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் சாமந்தி ரூ.120, சம்பங்கி, செண்டு மல்லி பூ கிலோ 100 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 600 ரூபாய்க்கும், கோழிகொண்டை கிலோ அறுபது ரூபாய் என விலை பூக்கள் விலை அதிகரித்து விற்பனையானது. இந்த விலை உயா்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்பதால், பூக்களின் விலை அதிகரித்துளளது. மேலும் இரண்டு நாட்களுக்கு பூக்களின் விலை இதே விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில மாதங்களாக, பூக்கள் விலை இல்லாமல் தவித்து வந்த விவசாயிகள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால், தருமபுரி மாவட்டத்தில் மதுபாட்டில் வாங்க குவிந்த மதுபிரியர்கள்.

 

திருவள்ளுவர் தினம் மற்றும் வருகிற 26.01.2023  வியாழக்கிழமை குடியரசு தினம் என்பதால் இரண்டு நாட்கள்  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ், செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள்  தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள்  முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தை பொங்கல் பண்டிகையொட்டி மதுப் பிரியர்கள் மதுவோடு பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதுக் கடைகள் விடுமுறை என்பதால்,  நேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபிரியர்கள்,  நாளை  மது அருந்த தேவையான மதுவை வாங்க குவிந்தனர். இதனால் மதுபானக் கடைகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் ஒவ்வொருவரும், மூன்று, நான்கு என அள்ளிச் சென்றனர். மேலும் விடுமுறை என்பதால், பொங்கலுக்கு  கள்ளத்தனமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களும் சாக்கு பைகளில் மது வாங்கி சென்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளில் பொங்கல் பண்டிகை மற்றும் கடை விடுமுறை எதிரொலியால், வழக்கத்தை விட, ஒரு மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனையானது.