சேலம் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற 55 பணியாளர்களுக்கு மூன்று கோடியே 33 லட்சம் மதிப்பிலான பணபயன்களுக்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதை தொடர்ந்து அமைச்சர் உரையாற்றினார்.


நிதி ஒதுக்கீடு தேவை:


அப்போது அவர் பேசியதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவித திட்டங்களும் இல்லாமல், நிறைய திட்டங்களுக்கு பணம் ஒதுக்காமலும், அனுமதி பெறாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு சென்ற பணிகளை முடிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதிஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்கள்.  மேலும் நிறைய பணிகளுக்கு நம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது என்றும் பேசினார்.


அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒழுங்காக வரிவசூல் செய்யாமல் முழுக்க முழுக்க எந்த பணியும் செய்யாமல் அரசின் பணத்தை வைத்து சம்பளம் கொடுக்கப்பட்டு வந்த நிலை மாறி, ஒழுங்கு முறையில் கொண்டுவர வேண்டி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தங்களது பணியாளர்களுக்கு தானே சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தன்னிறைவு பெற்ற மாநகராட்சிகளாக, பேரூராட்சிகளாக, நகராட்சிகளாக செயல்பட்ட துவங்கி உள்ளது.


பணபலன்கள்:


மேலும் ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்தில் பணபலன்கள் அரசிடம் கிடைக்கும், மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் ஒழுங்காக செய்ய வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும், அனைத்து காலங்களிலும் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கும், நீங்கள் இதில் சுணக்கம் காட்டினால் பல பணியாளர்கள் பாதிக்கப்படுபவர்கள் எனவும் பேசினார். பணியில் இருந்தபோது மறைந்த ஊழியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 14 வட்டங்களில் 100 புதிய முழுநேர நியாயவிலை கடைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். மேலும் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட எட்டுத்துறைகளின் சார்பாக 1030 பயனாளிகளுக்கு 18 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 546 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.


அப்போது அவர் பேசியது, சேலம் மாவட்டத்திற்கு புதிதாக ஆயிரம் கோடியில் திட்டங்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கு 3 கோடி 33 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 75 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்தார்.



பின்னர் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் ஏற்காட்டில் இரண்டு கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் கவனத்திற்கு தற்போது தான் கொண்டுவரப்பட்டுள்ளது எனவே எட்டு கிராம மக்களும் பயன்பெறும் வகையில் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சேலம் ஏற்காட்டில் அரசின் வணிக வளாகங்கள், கடைகளுக்கு ஏலம் நடைபெற்று வந்தபோது பிரச்சினை ஏற்பட்டு நடுவில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு, நேர்மையான முறையில் டெண்டர் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.