சேலம்: மேட்டூர் அணை நீர்திறப்பு 7,500 கனஅடியாக குறைப்பு, நீர்வரத்து குறைவாக இருந்ததால் நேற்று முன்தினம், 118.54 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 118.20 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணை நீர்திறப்பு 7,500 கனஅடியாக குறைப்பு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது. 

நீர்வரத்து சரிவால், மேட்டூர் அணை டெல்டா பாசன நீர்திறப்பு வினாடிக்கு, 7,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த மாதம், 25ல் அணை நடப்பாண்டு, 4வது முறையாக நிரம்பியது. அணைக்கு கடந்த, 28ல் அதிகபட்சம் வினாடிக்கு, 1.10 லட்சம் கனஅடி நீர் வந்தது. அதன் பின்பு சில நாட்கள் நீர்வரத்து அதே நிலையில் நீடித்த நிலையில், பின்பு படிப்படியாக குறைய துவங்கியது.

அதற்கேற்ப கடந்த, 3ல் மேட்டூர் அணை நீர் மட்டம், 119.98 அடியாக சரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,200 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று காலை, 8,776 கனஅடியாக மேலும் சரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 14,500 கனஅடியாக இருந்த பாசன நீர்திறப்பு நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 10,500 கனஅடி யாகவும், 10:00 மணிக்கு, 7,500 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. நீர்வரத்து குறைவாக இருந்ததால் நேற்று முன்தினம், 118.54 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 118.20 அடியாக சரிந்தது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

 தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை, 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது.

மேலும், தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையாலும், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் மெயின் பால்ஸில் குளித்தும், பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.