சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்துள்ளது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையின் 16,500 கன அடியாக மேட்டூர் நீர்வரத்து நீடிப்பு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் மதியம், வினாடிக்கு, 20,500 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, இரவு, 10:00 மணிக்கு, 16,500 கனஅடியாக குறைந்தது. நேற்று காலை முதல் மாலை வரை, நீர்வரத்தில் அதே நிலை நீடித்தது. அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியே வினாடிக்கு, 16,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, உபரி நீர் வெளியேற்றும், 16 கண் மதகு மூடப்பட்டதால் ஷட்டர்கள் வழியே கசிவுநீர் மட்டும் வெளியேறியது. இதனால் மதகில், ஆங்காங்கே தேங்கி நின்ற தண்ணீரில், மீனவர்கள் மீன் பிடித்தனர்.
ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பியதால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
குறிப்பாக, கர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 7 நாட்களுக்கு பிறகு தற்போது நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.