சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. காலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.09 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.614 டி.எம்.சி.யாக உள்ளது
நடப்பு ஆண்டில் 5வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் ஜூன் 29ந்தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ந்தேதி 2வதுமுறையாகவும் ஜூலை 20 ந்தேதி 3வது முறையாகவும் ஜூலை 25ந்தேதி 4வது முறையாகவும் மேட்டூர் அணை அடுத்தடுத்து நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்த காரணத்தாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடரந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர் மட்டம் மெல்ல குறையத்தொடங்கியது.
இந்நிலையில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 36242 கனஅடி வீதம் வந்து கொம்டிருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 8 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.08,529 கனஅடியாக அதிகரித்தது. செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு 117.45அடியாக இருந்த நீர் மட்டம் புதன்கிழமை அதிகாலை முழு கொள்ளளவன 120 அடியாக உயர்ந்தது. நள்ளிரவில் நடப்பு ஆண்டில் 5வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. இன்று காலை 4:00 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.09 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாக்கு 1,16,683கன அடியாக அதிகரித்துள்துள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 68,700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.61 டிஎம்சியாக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,05,000 கன அடியாக குறைந்துள்ளது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1,35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,05,000 கன அடியாக குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது.