மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைந்தது...!
’’நேற்று வரை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 12,112 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 10,277 கனஅடியாக குறைந்தது’’

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சரிய துவங்கியுள்ளது, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.97 கன அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 808 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 12 ஆயிரத்து 112 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 10,277 கன அடியாக குறைந்தது. நீர் இருப்பு 35.30 டி.எம்.சி ஆக குறைந்துள்ளது.

கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 64.37 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 3,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் மட்டம் 116.96 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 11,014 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,112 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 10,277 கன அடியாக குறைந்தது.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.61 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 35.88 டி.எம்.சி ஆக சரிந்தது. அணையின் நீர்வரத்து 14,808 கன அடியிலிருந்து 12,112 கன அடியாக சரிவு. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழை குறைந்த காரணமாக பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக அதிகரிப்பு. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 650 கன அடியில் இருந்து 750 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.