கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது.  இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி கபினி 33,313 கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 77,984 கன அடி என மொத்தம்1,11,297 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

 

இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 1,20,000 கன அடியாகவே தொடர்ந்து வந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்ட பாறைகள் முழுவதும் மூழ்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைககப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநில அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரை, அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலைவரப்படி கபினி அணையிலிருந்து வினாடிக்கு 29,844 கன அடியும்ம், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 45,617 கன அடி என இரண்டு அணைகளிலும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 75, 641 கன அடியாக, நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

 



 

 

இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 4 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து, வினாடிக்கு 1,20,000 கன அடியிலிருந்து குறைந்து,  வினாடிக்கு 1,10,000 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து 10-வது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல் வரை தேக்கமடுந்துள்ளது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாடார்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இன்று மாலை மேலும்  நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.