தமிழகம் முழுவதும் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று சேலத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் மூன்று திரைகளில் படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கேண்டினில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தின்பண்டங்களை வாங்கியபோது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்தனர். 



மேலும் குளிர்சாதனபெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவலிங்கம் திரையரங்கில் உள்ள இரண்டு கேண்டின்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்த 150 க்கும் குளிர் பானங்கள், பத்திக்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திரைப்படத்தின் இடைவேளையில் திரையரங்குக்குள் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபடும் போது 50க்கும் மேற்பட்ட லிட்டர் பால் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து திரையரங்கு முன்பாக உள்ள கால்வாயில் கொட்டி அளித்தனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட லிட்டர் பாலில் இறந்த பூச்சிகள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



இதையடுத்து திரையரங்குக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். திரையரங்குகள் தின்பண்டங்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில், திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி பால் போன்ற உணவுப் பொருட்களில் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இதற்கு உடனடியாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.