சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் அடுத்துள்ள செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முதியோர்களான கிருஷ்ணன் (71), கண்ணையன் (75). சகோதரர்களான இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் அமலக்கத்துறையில் இருந்து கருப்பு பணம், பரிமாற்றம் தொடர்பாக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் முதியவர்களின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியோர்களான கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வங்கிக்கணக்கு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜராகி உள்ளனர்.



அப்போது எதன் அடிப்படையில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததோடு, மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதியோர்களை ஆஜராகும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்களை மிரட்டும் தோனியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முதியோர் தரப்பில் இருந்த வழக்கறிஞர் செல்லதுரை தரப்பினர் டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார் அளித்தனர்.



இதுகுறித்து விசாரித்த போது கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் வங்கி கணக்கில் 500 ரூபாய் பணம் மட்டுமே வைப்புத் தொகையாக உள்ளது. இருப்பினும் அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கருப்பு பணம் பரிமாற்றம் போன்று எந்த பணம் பரிமாற்றமும் இவர்கள் இருவரும் மேற்கொள்ளவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக இவர்களிடம் உள்ள நிலத்தை பாஜக நிர்வாகி ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அனுப்பி உள்ள சம்மன் பாஜக நிர்வாகிகள் தூண்டுதல் பெயரில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், சாதியை குறிப்பிட்டு தபால் அனுப்பிய அமலாக்கத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். விவசாயிகள் கருப்பு பணம் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.