கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அரூா் முதல் திருக்குவளை வரை, சைக்கிள் பயணம் செல்லும் திமுக தொண்டரின் சைக்கிள் பயணத்தை முன்னாள் அமைச்சா் பழனியப்பன்  துவக்கி வைத்தார். 

 

தருமபுரி மாவட்டம்  அரூர் அடுத்த சிக்களூர்  பகுதியைச் சேர்ந்த 63 வயது திமுக நிர்வாகி  சேதுநாதன் என்பவர்,  கலைஞர் கருணாநிதி நூறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த  திருவாரூர் மாவட்டம் திருக்குவளை வரை சைக்கிளில் பயணமாக சென்று, கலைஞரின் சாதனை விளக்கி துண்டு பிரசுரம் வழங்க வேண்டும் என தனது ஆசையை முன்னாள் அமைச்சரும், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான  பழனியப்பனிடம் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுக தொண்டரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சேதுநாதனுக்கு  சைக்கிள் புதியதாக வழங்கி, அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்.



 

இதைத்தொடர்ந்து இன்று அரூர் ரவுண்டானா வில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து  ரவுண்டான பகுதியில் இருந்து சைக்கிள் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்பொழுது திமுகவினர் சைக்கிள் பயணம் செல்லும் சேதுநாதனை வாழ்த்தி, வழிச்செலவிற்கு நன்கொடை வழச்கினர். இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள சிறிய அளவிலான ஒலிபெருக்கியில் கலைஞர் கருணாநிதியின் பாடல்களும் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய குரல் பதிவை ஒளிபரப்பியவாறு பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் இன்று தொடங்கி சேலம், நாமக்கல், முசிரி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்று திருக்குவளையில் 20-ம் தேதி முடிவடைகிறது.  இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அரூர் நகர செயலாளர் முல்லை ரவி, கோடீஸ்வரன் உள்ளிட்ட  மாவட்ட, மாநில, நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.