தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக உள்ளது.  இதனால்  கிறிஸ்துமஸ் மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். 



 

ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும், தொங்குப் பாலத்தின் மீது நின்றும் பிரதான அருவி, 5 அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



தருமபுரியில் தமிழகத்தில் உள்ள இயற்கை ஆர்வலர்களின் கூடல் விழாவில் 100-க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்களுக்கு  நம்மாழ்வார்  விருதுகள் வழங்கப்பட்டது.

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை, கலாம் பசுமை நல அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் இணைந்து தமிழக முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பசுமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி, தருமபுரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பம்பை, சிலம்பம், கோலாட்டம், வாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைகள், நடனங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் இயற்கையை பாதுகாத்து மரம் மற்றும் மண் வளங்களை பாதுகாத்து வரும் அறக்கட்டளைகளுக்கும்,  மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, பசுமை மற்றும் இயற்கை பாதுகாப்பில் சாதனை படைத்து வரும் 125 இயற்கை ஆர்வலர்களை பாராட்டி நம்மாழ்வார் விருதுகள் வழங்கப்பட்டது.



 

இந்த விருதினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வழங்கினார். மேலும் இயற்கை ஆர்வலர்கள் கூடல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கி, பராம்பரிய இயற்கை உணவு வகைகளை கொண்டு மதிய விருந்தளிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார், டிஎஸ்பி அய்யர்சாமி, பெரியார் பல்கலைக்கழக இயக்குநர் மோகனசுந்தரம், வட்டாட்சியர் சுகுமாரன், அறக்கட்டளை நிர்வாகிகள் மகேந்திரன், சின்னமுத்து, ஆசிரியர் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.