தருமபுரி மாவட்டத்தில், முத்துகவுண்டன் கொட்டாய், பழைய தருமபுரி, சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் வெல்லம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக் காலங்களில் வழக்கத்தை விட அதிகளவில் இங்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, வேலுார், சென்னை போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

 



 

தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி குறைந்துள்ளது. இதன் காரணமாக வெல்லம் தயாரிக்க கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து கரும்பு வாங்கி வருகின்றனர். இதனால் ஒரு டன் கரும்பு வாங்க, 5,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு டன் கரும்பில் இருந்து 95 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரவை ஆலைகள் செயல்பட்டு வந்தது. ஆனால் உருண்டை வெல்லம் விற்பனை மற்றும் விலை இல்லாததால், பெரும்பாலான ஆலைகளை தொழிலாளர்கள் மூடினர். இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்றனர்.

 



 

மேலும் ஒரு சிலர் மட்டுமே பாரம்பரிய தொழில் காரணமாக வருவாய் இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து உருண்டை வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது ஆயுதபூஜை , தீபாவளி பண்டிகை வருவதை எதிர் நோக்கி, தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர்கள் உருண்டை வெல்லம் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வியாபாரம் மற்றும் வருவாய் இல்லாமல் இருந்து வந்தாலும், ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் போதிய வருவாய் கிடைத்துவிடும்.



 

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெல்லம் ஏற்றுமதி செய்ய முடியாமல், வருவாய் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஓராண்டாக தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வந்தனர். தற்போது ஒரு கிலோ உருண்டை வெல்லம் 40 ரூபாய்க்கும் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம் 1200 ரூபாய்க்கும் விற்பனயாகிறது. ஆனால் இந்த விலை, மூலப் பொருட்கள், அரவை கூலிக்கே சரியாக இருக்கும். கிலோ உருண்டை வெல்லம்  50 முதல் 60 வரை விற்பனையானால் மட்டுமே ஓரளவு வருவாய் கிடைக்கும். மேலும் பண்டிகையையொட்டி கிலோ வெல்லம் 60 வரை விலை உயரும் என்ற நம்பிக்கையில் வெல்லம் உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.