தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட சேலூர் வனப் பகுதியில் கடந்த 15ஆம் தேதி முகம் மற்றும் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பாபு ராஜ் என்ற தெரியவந்தது. தொடர்ந்து பாபுராஜ்  மீது கரியபட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருந்ததும் தெரியவந்தது. 

 


கைது செய்யப்பட்ட விஜயகுமார்


 

தொடர்ந்து பாபுராஜ் கொலை குறித்து அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்திய வந்தனர். அப்போது சிட்லிங் மலை கிராம பகுதியில் அருள்வாக்கு கூறி வரும் விஜயகுமார் என்பவருக்கும்,  வேலனூரைச் சேர்ந்த தீர்த்தம்மாள் என்ற பெண்ணுக்கும்  கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்ற போது சில மாதங்களுக்கு முன்பு பாபுராஜ்க்கும், தீர்த்தம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விஜயகுமார், கள்ளத் தொடர்பை கைவிடுமாறு பாபுராஜ்விடம் பலமுறை கூறியுள்ளார்.  அப்போது பாபுராஜ், நான் ரவுடி என்றும், ஏற்கனவே ஒரு கொலை செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 


விஜயகுமாரின் மகன் விக்னேஷ்


 

தொடர்ந்து  உன்னை கொன்று விடுவேன் என விஜயகுமாரை மிரட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து விஜயகுமாரிடம், காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் விஜயகுமார் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து பாபுராஜ் தன்னை மிரட்டியதால் அச்சமடைந்து, விஜயகுமார் பாபுராஜை வர வழைத்து, அதிக அளவில் மது அருந்த வைத்துள்ளார். பின்னர் பாபுராஜை சராமாரியாக வெட்டி கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார். மேலும்  இந்த தடயங்களை அழிக்க அவரது மகன் விக்னேஷ் உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரூர் காவல் துறையினர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் விக்னேஷை கைது செய்தனர். மேலும் மலை கிராமத்தில் கள்ளத் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையில், தந்தை, மகன் இருவரும் சேர்ந்து  ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.