தருமபுரி மாவட்டத்தில் நெருப்பூர், நாகமரை, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக  கருப்பு கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். 10 மாத பயிரான கருப்பு கரும்பு பொங்கல் பண்டிகைக்கு சில தினங்கள் உள்ள நிலையில் கரும்புகளை வெட்டி இடைத்தர்கள் மூலம் குறைந்து விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகள் குறைந்து விலைக்கு கேட்பதால் ஒரு சில விவசாயிகள்  தாங்கள் விளைந்த கரும்புகளை அவர்களே வெட்டி ஊர் ஊராக சென்று விற்பனை செய்வார்கள். இதனால் பொங்கல் பண்டிகையின் போது மட்டும் கரும்பு விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் பண்டிகை முடிந்தவுடன் கரும்பு விற்பனையாகமல் தேங்கி விடுவதால் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் இழப்பு ஏற்படுகிறது.

 



 

தொடர் மழையின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கருப்பு கரும்பு விளைச்சல் நன்கு விளைந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்ட கருப்பு கரும்புகளை தமிழக அரசு நியாய விலை கடைகள் மூலம் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்க்காக அந்தந்த மாவட்டத்திலே கரும்புகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

 

ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விளைந்துள்ள கரும்புகளை, வியாபாரிகளை நம்பியே விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அதிகாரிகாரிகள் வாங்க வரவில்லை. தற்போது வழங்கப்படும் கரும்புகள் எடப்பாடி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கப்படுகிறது. வெளியூரில் சென்று ஒரு ஜோடி கரும்பு  40 ரூபாய் வரை வாங்கி வருகின்றனர். மேலும் அங்கிருந்து நியாய விலை கடைக்கு வருவதற்கு வண்டி வாடகை கணக்கிட்டால், கரும்பு ஜோடிக்கு  50 ரூபாய்க்கு மேல் வருவதாகவும் கூறப்படுகிறது.



 

ஆனால் உள்ளூர் விவசாயிகள் வியாபாரிகளுக்கு ஒரு ஜோடியாக கரும்பு 60 வரை விற்பனை செய்கின்றனர். ஆனால் வியாபாரிகள் கரும்பு முழுவதையும் வாங்குவதில்லை. நல்ல தரமான, உயரமான கரும்புகளை மட்டுமே வாங்கி செல்கின்றனர். ஆனால் ஒரு சில கரும்புகளை ஒதுக்கிவிடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் அரசு கொள்முதல் செய்தால், சராசரியாக அனைத்து கரும்புகளை வாங்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், வெளியூரில் வாங்குவதை விட அரசுக்கு குறைவான விலை கிடைக்கும். எனவே தருமபுரி மாவட்டத்தில் வழங்கவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கருப்பு கரும்பினை, உள்ளூர் விவசாயிகளிடமே வாங்க  தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.