தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உணவு தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைந்த ஆண் யானை மின்கம்பி உரசியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்னா யானை, ஆண் யானை இரண்டும் சுற்றி திரிந்தது. இதில் விவசாய பயிர்களை சேதம் படுத்திய நிலையில் மக்னா யானையை, சின்னத்தம்பி கும்கி யானை உதவியுடன் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இந்த ஆண் யானை மட்டும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது.

 

இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து ஆண் யானை வெளியேறியுள்ளது. இதனை பாலக்கோடு வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது, தருமபுரி வழியாக கம்பைநல்லூர் பகுதிகளில் வந்த காட்டு யானை இன்று காலை கெலவள்ளி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக சென்றுள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பியில், யானை உரசியது. இதில் தலை, காது பகுதிகளில் மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கடந்த 10 நாட்களில் 4 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. 

 

இதனையடுத்து பின் தொடர்ந்து வந்த பாலக்கோடு மற்றும் மொரப்பூர் வனத்துறையினர் யானை உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உயிரிழந்த யானையை பார்த்துவிட்டு செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருக ஒரே இடத்தில் மூன்று யானை உயிரிழந்தது. தொடர்ந்து இன்று மீண்டும் 25 வயது ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய இந்த ஆண் யானை 17 மணி நேரம் எங்கும் நிற்காமல், யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் பயணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.