தருமபுரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மூன்றம்ச கோரிக்கை வலியுறுத்தி கடும் குளிரிலும் போராட்டம் செய்து வருகின்றனர்.

 

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்துறை தலைமைச் செயலாளர் சிவராமன் ஐ.ஏ.எஸ், ஆணையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தருமபுரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் காலை  முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்களை நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது நகராட்சி அலுவலக கேட்டை விட்டு வெளியே போங்கள் என  திமுக நகராட்சி தலைவரின் கணவர் கூறியதாக ஒப்பந்த ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.



 

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த 33 வார்டுகளிலும் நகராட்சி நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் (சரம் எனர்வோ) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஆண்கள், பெண்கள் என  106 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு இஎஸ், பி.எப், பிடித்தம் போக 315 ரூபாய் தின கூலியாக வழங்கப்படுகிறது

 

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் பற்றாக்குறை என்பதால் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாடு உள்துறை தலைமைச் செயலாளர் சிவராம் ஐ.ஏ.எஸ். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக 610 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை கடந்த மாதம் 27ஆம் தேதி அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

ஆனால் தருமபுரி ஒப்பந்த ஊழியர்களுக்கு உள்துறை செயலாளர் ஆணையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது அவ்வாறு உங்களுக்கு வழங்க முடியாது, உங்களுடைய ஒப்பந்த உரிமையாளரை சென்று கேளுங்கள். நீங்கள் யாரென்று எங்களுக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.

 

இதனால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தருமபுரி நகராட்சியில் உள்ள 106 ஒப்பந்த ஊழியர்களும்  மூன்று அம்ச கோரிக்கைகளான உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 610 ரூபாய் வழங்க வேண்டும்.

 

மேலும் தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 7000 வழங்க வேண்டும். தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எஃப் மற்றும் இதர பணத்தை உரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறும்போது,

 

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் இதுவரை எந்த அதிகாரியும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதுநாள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் எங்களுடைய உரிமையாளர் யார் என்று தெரியாத நிலையில் எங்களிடத்தில் நகராட்சியின் துப்புரவு ஆய்வாளரும் சூப்பர்வைசர் ஆகியோர் மேற்பார்வையில் பணி செய்து வருகிறோம். எங்களுக்கு தினக் கூலியாக ஒரு நாளைக்கு 365 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் இ எஸ் பி போக 315 ரூபாய் வழங்குகின்றனர்.

 

இந்த நிலையில் விடுமுறைகள் போக  மாதம் 6000 ரூபாய் பெற்று வருகிறோம். எங்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க நகராட்சி தலைவரிடம் கேட்டபோது, “நீங்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. வெளியே போங்கள்” என்று கூறுகிறார்.  நகராட்சி தலைவரின் கணவரும் தருமபுரி திமுக நகர செயலாளருமான நாட்டான் மாது, “நீங்கள்  யார் என்று எங்களுக்கு தெரியாது. அலுவலக கேட்டை விட்டு வெளியே போங்கடா”  என்று அவதூறாக பேசி உள்ளார். தருமபுரி 33 வார்டுகளையும் தினமும் தூய்மைப்படுத்தி வரும் எங்களை இழிவாக பேசியதாலும் உயர் நீதிமன்ற ஆணைப்படி எங்களுடைய தினக்கூலியை ரூ.610 உயர்த்தி கொடுக்கும் வரை நாங்கள் தூய்மை பணிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.