வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் நீலகிரி, கோவை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி  ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.



 

தொடர்ந்து மாலை தருமபுரி, நெசவாளர் காலனி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளி, அரூர், அச்சல்வாடி, கொளகம்பட்டி, ஆண்டிப்பட்டி புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை பெய்தது. தருமபுரி நகரில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி, மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து கடந்த 2 மாதமாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 



 

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அடுத்த செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் இலக்கியம்பட்டி, பெருமாள் கவுண்டர் தெரு, அரசு தொடக்க பள்ளி உள்ளிட்ட பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை தண்ணீர் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி, தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கை குழந்தைகள், சிறுவர்கள் வைத்து கொண்டு வீடுகளில் வசிக்க முடியாமல், மக்கள் முகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

 



 

மேலும் ஒரு சிலர் வீடுகளில் தேங்கிய தண்ணீர் பாத்திரத்தில் எடுத்து வெளியில் ஊற்றினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை வெள்ளம் குறையாமல் இருந்து வருகிறது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல், வீடுகளுக்குள் நுழைந்துள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.