மருதமலை திரைப்படத்தில் வந்திருந்த நடிகர் வடிவேலு காமெடியை போன்ற சம்பவம் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் நடந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் புகார் கொடுத்தார். அதில் கடந்த 28 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காடு செல்வதற்காக சேலம் ரயில்வே ஜங்ஷனில் மனைவியோடு வந்திருந்தேன்.


பணம், நகையுடன் மாயம்:


பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற மனைவி புஷ்பா காணவில்லை. அவரை எனது அம்மாவின் 20 பவுன் நகை ரூபாய் 15,000 பணத்தோடு மாயமாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் மனுவை அளித்தார். 



இதனை ஏற்று புஷ்பா மாயமானதை வழக்காக பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரின் தீவிர விசாரணை நடத்தி தேடி வந்த நிலையில், அந்த பெண் மதுரையில் ஒரு கட்டடிடத் தொழிலாளியோடு குடும்ப நடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை மதுரைக்கு அனுப்பி அந்த இளம் பெண்ணை மீட்டு சேலம் அழைத்து வந்தனர்.


கிறுகிறுத்துப் போன போலீசார்:


அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் காவல்துறையினரையே அந்த இளம் பெண் கதிகலங்க வைத்து விட்டார். "புஷ்பா உன் கணவரை விட்டு ஏன் ஓடிச் சென்றாய்" என விசாரித்த போது, அந்தப் பெண் என்னை காணவில்லை என புகார் கொடுத்தவன் உண்மையான கணவனே இல்லை. என்னோட மூன்றாவது கணவன். ஒரு வருஷமாக அவனுக்கு அடைக்கலம் கொடுத்து கூட வச்சிருந்தேன். இது மட்டும் தான் என காவல்துறையினரிடம் தெரிவித்தார்.


தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முதலாவதாக ஆத்தூரைச் சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளியை திருமணம் செய்த அந்த பெண் இரண்டு மகன்கள் ஒரு மகள் என கணவரோட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார். மூன்று குழந்தைகளும் கணவருடன் வளர்ந்து வருகின்றன. பிறகு கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் வேறு வேறு நபர்களுடன் பழகி வாழ்ந்திருக்கிறார். கடைசியாக கேரளா மாநிலம் பாலக்காட்டில் வேலை பார்த்தபோது கடலூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளிடம் பழகி அவருடன் ஓராண்டுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்துள்ளார். 



இதனை அடுத்து கடந்த மாதத்தில் சேலம் ரயில் நிலையத்தில் நடக்கும் கட்டுமான பணிக்கு இருவரும் வேலைக்கு வந்துள்ளனர். அப்பொழுது மதுரை சார்ந்த கட்டிட தொழிலாளுடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் சம்பவத்தன்று மூன்றாவதாக வாழ்ந்து வந்தவரை ரயில் நிலையத்தில் விட்டு விட்டு மதுரைக்காரருடன்  சென்றுள்ளார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழும் நபர் என்பதால் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியுள்ளனர்.


வழக்கு முடிந்தது எப்படி?


மனைவி மாயமாகி விட்டார் என புகார் கொடுத்ததால், அப்பெண்ணை பிடித்து வந்து விசாரித்தனர். 20 பவுன் நகை பணம் எதையும் அவர் எடுத்துச் செல்லவில்லை என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. கடைசியாக அந்த இளம் பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்த மூன்றாவது கணவரோடு செல்ல முடியாது. இனி மதுரக்காரருடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்துள்ளார்.


அதே நேரம் புகார் கொடுத்த நபர் எப்படியாவது என்னோடு அனுப்பி வையுங்க என காவலர்களிடம் கெஞ்சினர். அவருக்கு காவல்துறையினர் அறிவுரை கூறு எப்படியாவது மிஸ்ஸிங் கேஸை முடித்து விட வேண்டும் என்ற என்று அப்பெண்ணை சேலத்தில் உள்ள காப்பகத்தில் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விசாரணை செய்ததில் அங்கு மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்த நபரும் வரவில்லை. இதனால் அந்த பெண் விருப்பப்பட்டவருடன் செல்வதாக தெரிவித்தார். உடனடியாக நீதிமன்றம் வழக்கை முடித்து அப்பெண்ணை அனுப்பி வைத்தது.