தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பணியை முடித்து  விட்டு,   கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் இன்று நள்ளிரவில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, லாரி திடீரென பழுதானது. இந்த வாகனத்தில் பழுது நீக்கும் பணியில் திருச்சி மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் பாரம் ஏற்றி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியை பின் தொடர்ந்து, குஜாராத்தில் இருந்து அவினாசி க்கு உருளைக் கிழங்கு ஏற்றி வந்த லாரி மற்றும் அதனையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



 

இந்த விபத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு லாரியில் வந்த திருச்சி மாவட்டம் எடமலைபுதூரை சேர்ந்த  ரத்தினவேல், கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த சித்தையன்  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), மாரியப்பன் (28),  திருச்சியைச் சேர்ந்த பாண்டியன்(30), பகவதி ராஜ்(34), மதன்குமார்(25) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த அனுமந்தன் (43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, அவசர ஊர்திகளின் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 



 

மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனங்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 



 

தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது 3 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானதில், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தொப்பூர் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.