’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
'சமூக வலைதள கமெண்டுகளுக்கு கால்கடுக்க நின்று விளக்கம் தரும் ஆதவ் அர்ஜூனா, கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு மட்டும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கடந்துப்போனார்’

கொள்கை எதிரி என பிரகடனப்படுத்திய பாஜகவுடன் விஜய், கூட்டணி வைக்கப்போவதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு விஜய் தரப்பில் இருந்து உறுதியான மறுப்பு இதுவரை எதுவும் வெளிவராதது, அப்படியான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்றுவருமோ என்ற சந்தேகத்தை தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கே ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவை கண்டு பயப்படுகிறாரா விஜய் ?
தொடக்கத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மாற்றம் ஏற்பட்டது. பாஜக என்ற வார்த்தையை குறிப்பிடுவதை கூட விஜய் தவிர்க்கத் தொடங்கினார். குறிப்பாக, சிபிஐ விசாரணைக்கு டெல்லிக்கு சென்று ஆஜராகிவிட்டு வந்த பின்னர், பாஜக குறித்து விமர்சிப்பதையும் பேசுவதையும் கூட அவர் நிறுத்திக்கொண்டார். அதற்கு காரணமாக, இப்போது நடைபெறவுள்ளது சட்டமன்ற தேர்தல் என்றும் தமிழ்நாட்டை ஆளப்போவர்களுக்கு இடையேயான போட்டிதான் இது என்று திமுகவை மட்டும் விமர்சிப்பதற்கு ஒரு பெரிய உருட்டு உருட்டினார்.
நடிகராக இருக்கும்போதே நரேந்திரமோடியை சந்தித்த விஜய்
பாஜகவின் பி டீமாகதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் அவர் நடிகராக இருக்கும்போதே நரேந்திரமோடியை சந்தித்து தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேசியிருக்கிறார் எனவும் அவரது எதிரணியினரும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில்தான், பாஜகவுடன் விஜய் கூட்டணி சேரவுள்ளதாகவும் இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும் விஜயின் நண்பருமான நடிகர் பவன் கல்யாண், தூதுப் புறாவாக மாறி பேசி வருகிறார் என்றும் செய்திகள் பரபரவென வெளியாகத் தொடங்கின.
உறுதியாக மறுக்காத விஜய் - நடக்கப்போவது என்ன ?
இது ஒரு அஜெண்டாவாகவே இருந்தாலும் அதை உடனடியாக மறுத்து அறிக்கைவிடுப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், விஜயோ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமோ இப்படியான செய்திகளை அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. இதுதான் பொதுமக்களை தாண்டி, அவரது கட்சி தொண்டர்களிடமே சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
வந்தந்திகளுக்கு பதில் சொல்லாத ஆதவ் அர்ஜூனா
அந்த கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோதுகூட ’வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று கூறி நகர்ந்தாரே தவிர, உறுதியாக அந்த செய்தி பொய் என்றும், கொள்கை எதிரியாக அறிவித்த பாஜகவோடு கூட்டணி எப்படி வைக்க முடியும்? என்ற ரீதியிலோ எதுவும் அவர் பேசவில்லை. சோஷியல் மீடியாக்களில் வரும் கமெண்டுகளுக்கெல்லாம் கால்க்கடுக்க நின்று பதில் சொல்லும் ஆதவ் அர்ஜூனா, கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பேசப்பட்டு வரும் செய்திகளை வதந்தி என்று சொல்லிவிட்டு கடந்துப்போனதும் அரசியல் விமர்சகர்கள் இடையே சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
சம்மன் அனுப்பிய சிபிஐ – சமரசம் செய்துகொள்ளும் விஜய்?
இப்படியான நிலையில், நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பவர்களுக்கான நேர்காணலை அந்த கட்சி நடத்தவிருந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக நாளை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கிறது சிபிஐ. கரூர் வழக்கை வைத்து விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாகவும் பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் இந்த கூட்டணி விவகாரத்தில் வெளிப்படையாக எப்போது பதில் கூறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
”அதிமுக கூட்டணிதான் ஆனால் பாஜக தலைமை இல்லை”
ஒருவேளை கசிந்துவரும் செய்திகளை உண்மைக்குவது போன்று, திடீரென பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டு, இது தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல் அதனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறோம். ஆனால், பாஜக தலைமையை ஏற்கமாட்டோம் என விஜய். சப்பைக் கட்டு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அரசியலில் எதுவும் நடக்கும். எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது !























