ஆட்சியில் தவெக- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார்கள் மாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து ஆட்சி அதிகாரத்தை தவெக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அறநிலையத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சுவர்ணா நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பிராமணர்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் பொறுப்பில் இருப்பதால் அனைத்து சாதியினரும்  அர்ச்சகராகும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகளை சார்பாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

மேலும் அறிநிலையத்துறை அமைச்சராக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  இந்த நிலையில் தான் நேற்று திடீரென அறநிலையத்துறை செயலாளர் சுவர்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பிராமண சமுதாயம் என்பதால் பணியிட மாற்றமா.?

இது தொடர்பாக பாஜக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆட்சிக்கு வந்ததும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவர்ணா அவர்களை நியமித்தார். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அவரது ஜாதியை கண்டுபிடித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

Continues below advertisement

அதைத் தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நேற்று ரமேஷ் பதவியேற்றார். அவரது ஜாதியையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த கி.வீரமணி அவர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செயலாளர் என இரு பதவிக்கும் பிராமணர்களை எப்படி நியமிக்கலாம் என மிரட்டல் தொனியில் அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து சுவர்ணா அவர்கள் விடுவிக்கப்பட்டு, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹிந்து மத வெறுப்பாளரான கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஜாதி மத அடிப்படையில் பணி நியமனமா.?

முதலமைச்சராகப் பதவியேற்றதும், சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்கு சென்று கி.வீரமணி அவர்களை ஜோசப் விஜய் சந்தித்ததால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது.கி.வீரமணியின் மிரட்டலுக்கு பணிந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், அதிகாரிகள் இடையே ஜாதி பற்றிய தாக்கத்தைதான் ஏற்படுத்தும். இனி ஜாதி, மத அடிப்படையில்தான் நியமனங்கள், இடமாறுதல்கள் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மத வெறுப்பாளர் கி.வீரமணி அவர்களின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.