தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெறமுடியாமல் தவெக தவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்து தவெகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. அடுத்ததாக கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது தவெக.
தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்
இதற்கிடையே தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவின் ஒரு பிரிவினர் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக அதிமுவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ், கே.பி.அன்பழகன், வீரமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்களும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணியாக செயல்பட்டனர். அடுத்தாக தமிழக சட்டமன்றத்தில் இரு பிரிவாக செயல்பட்டு வந்த அதிமுகவினர், அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியையும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதே போல எஸ்.பி.வேலுமணி அணி விஜயபாஸ்கரை கொறடாவாக நியமிக்க கடிதம் கொடுத்தது. ஆனால் தற்போது வரை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
அதிமுக மாஜிக்கள் கட்சி பதவியில் இருந்து நீக்கம்
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அதிரடியாக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் என ஒட்டுமொத்தமாக 27 மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் எஸ்.பி.வேலுமணியின் அணியில் உள்ள லால்குடி தொகுதியின் எம்எல்ஏவான லீமா ரோஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்த வகையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அங்கிருந்து விலகி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்தவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் அதிமுக மகளிர் அணி இணைச்செயலளார் பொறுப்பானது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் மார்ச் மாதம் லால்குடி தொகுதி வேட்பாளராக லீமா ரோஸ் பெயர் இடம்பிடித்தது. லீமா ரோஸ் அசூர வளர்ச்சியானது அதிமுகவில் மட்டுமில்ல அரசியல் வட்டாரமே திரும்பிபார்க்கவைத்தது.
”வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்க சொல்லுங்க”
இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் லீமா ரோஸ் முக்கிய பாங்காற்றி வருகிறார். அந்த வகையில் மூத்த நிர்வாகிகளின் பொறுப்புகளை அடுத்தடுத்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் பதவியை நீக்காததற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், லீமா ரோஸ் மட்டும் தப்பித்து விட்டார் என நகைச்சுவையாக பேசியுள்ளனர். அதற்கு லீமா ரோஸ் அதிமுகவில் இணைய பெறப்பட்ட பணத்தையும், கட்சி பதவி வழங்க கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டு கட்சியில் இருந்து நீக்கிகொள்ளட்டும் என லீமா ரோஸ் பேசியதாக தகவல் வெளியாகி வருகிறது.
