முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது முதல் திரைத்துறையினரின் ஆதிக்கம் அரசு நிர்வாகத்தில் அதிகம் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் முக்கியமான அரசு பதவிகளை தன்னுடைய ஆஸ்தான நபர்களுக்கு விஜய் கொடுக்கத் தொடங்கியதாகவும் கண்டனங்கள் வரத் தொடங்கின. குறிப்பாக, விஜயின் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி என்ற அறிவிப்பு வந்தபோது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஏன், ஆட்சிக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகளும், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுமே அந்த நியமனத்தை எதிர்த்தன.

Continues below advertisement

Continues below advertisement

முன்பு கர்நாடகா, இப்போது கேரளா..

இதனையடுத்து, திரைப்பட தயாரிப்பாளரும் விஜயின் ஜனநாயகன் படத்தை எடுத்தவருமான கர்நாடகாவை சேர்ந்த வெங்கடநாராயணாவிற்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை தூக்கிக் கொடுத்தார் முதல்வர் விஜய். இதுவும் கடும் எதிர்ப்புகளுக்கு வித்திட்டது. ரத்தன் பண்டிட் வெற்றிவேல் பதவியை ரத்து செய்தது மாதிரி, முதல்வர் விஜய், வெங்கட்நாராயணாவின் பதவியை ரத்துச் செய்யவில்லை. விமர்சனங்கள் வந்தால் வந்துவிட்டு போகட்டும், நான் தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற ரீதியில் அவரையே டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தொடர அனுமதி அளித்தார் அவர். தமிழ்நாட்டின் உரிமைகளையும் போதிய நிதியையும் மத்திய பாஜக அரசுக்கு எடுத்துக்கூறி அதனை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும் முக்கிய பொறுப்பு உள்ள பதவியாக கருதப்படும் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தமிழ்நாட்டை சேராதவரை, தமிழும் கூட சரியாக பேச வராதவரை நியமித்தது பெரும் சர்ச்சையானது. தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்த புரிதல் இல்லாதவர் எப்படி டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செயல்பட முடியும் என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தும் முதல்வர் விஜய் தன்னுடைய முடிவில் இருந்து மாறவே இல்லை.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவருக்கு அரசு பொறுப்பு

இந்நிலையில், முதல்வர் அடுத்த அதிரடியாக பிகில், கோட் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கல்பாத்தி அகோரம் என்பவருக்கு கோயில்களின் அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் இடம் கொடுத்து, அரசு பொறுப்பு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே, கர்நாடகாவை சேர்ந்தவருக்கு அரசு பதவி வழங்கிய நிலையில், தற்போது கேரளாவை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்திக்கும் அரசு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அரசு பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரங்கள்.

இந்து சமய அறநிலையத்துறைக்கும் அர்ச்சனா கல்பாத்திக்கும் என்ன தொடர்பு ?

அதே நேரத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை தேர்வு செய்யும் முக்கியமான குழுவில் அர்ச்சனா கல்பாத்திக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியிருக்கிறது.  அர்ச்சனா கல்பாத்தி ஆன்மீகவாதியா? அல்லது கோயில் தொடர்பான ஆய்வுகளை செய்து பட்டம் பெற்றவரா? அல்லது தமிழ்நாட்டின் கோயில்கள் குறித்த ஆழமான புரிதல் கொண்ட அறிவாலியா? என்ற கேள்விகள் எல்லாம் எழத் தொடங்கியிருக்கின்றன.

பொம்மபுரம் ஆதினம் தலைமையிலான குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஆன்மீக சொற்பொழிவாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில், துறைக்கும் கோயிலுக்கும் தொடர்பே இல்லாத அர்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.